ஸ்டாலின் பேச்சில் பயம் தெரிகிறது: அமைச்சர் பாண்டியராஜன்

திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சில் பயம் தெரிவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆவடி தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் மாஃபா பாண்டியராஜன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவின் வெற்றி நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மாஃபா பாண்டியராஜன் கூறும்போது, “ஆவடி தொகுதியில் 7ஆம் நாள் பிரச்சாரத்தை முடித்துள்ளோம். திமுக தற்போதுதான் களத்துக்கு வந்திருக்கிறது. மக்களைச் சந்தித்துப் பார்க்கையில் அதிமுகவுக்கு எழுச்சிமிக்க வரவேற்பு உள்ளது. சிறுபான்மையினரிடம் நல்ல ஆதரவு இருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக ஸ்டாலின் பேச்சில் விரக்தி தெரிகிறது. பயம் தெரிகிறது. எல்லையற்ற ஏமாற்றம் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்களிடையே பேசும்போது, “நாம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறோம் என்று சொன்னேன். இப்போது 5 நாட்களாக நான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் நான் உணர்ந்ததை வைத்துச் சொல்கிறேன். 200 அல்ல 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே