நித்யானந்தாவைப் போல தனித் தீவு வாங்கி ஸ்டாலின் முதல்வராகலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

நித்தியானந்தா போல ஒரு தனி தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் ஸ்டாலின் முதல்வராகலாம் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மூத்தறிஞர் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், குடியுரிமை சட்டம் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு இல்லை.

இதுகுறித்து நேற்றே அதிமுக கூறியுள்ளது. எனவே எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய விஷயங்களை அதிமுக ஆதரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

ஒரு குழப்பமான கட்சி திமுக, நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்த முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதனை ஏற்பதாக கூறிய ஸ்டாலின், தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார்.

மேலும் முதல்வர் கனவோடு தான் ஸ்டாலின் உள்ளார்.

எனவே அவர் நித்தியானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் முதல்வராக ஸ்டாலின் ஆகலாம்; தமிழகத்தில் ஒரு போதும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே