தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் – குஷ்பு விமர்சனம்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கிளம்பிய குஷ்புவை, சென்னை அருகே முட்டுக்காடு என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

அப்போது நிருபர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது: கடலூர் வரை போக வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தோம். தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது. இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். 

பெண்களை மதிக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். மதிக்காத இடத்தில் இருக்க மாட்டார். கொள்கைகளை வீட்டில் இருந்து துவங்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்.பெண்களை பற்றி இழிவாக பேசியதால் தான் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம்.

மனுதர்மத்தில் பெண்களை உயர்வாக பேசிய பகுதிகள் திருமாவளவனுக்கு தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் வரப்போகிறது. பா.ஜ., மீது எந்த குற்றமும் சொல்ல முடியாது.

பெண்களை மதிக்க அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பிரச்னை உருவாக்க வாய்ப்பு உள்ளது. எனவே நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே