நாடு முழுவதும் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் லவ் அகர்வால் பேசியதாவது:

ஒமைக்ரான் வகை கரோனா உலகம் முழுவதும் 91 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது டெல்டா வகை கரோனாவை விட அதிகளவில் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 32, தில்லியில் 22, ராஜஸ்தானில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 20 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக உள்ளது. மொத்த பாதிப்பில் கேரளத்திலிருந்து மட்டும் 40.31 சதவிகிதம் பதிவாகிறது.

உலகளவில் இந்தியாவில் தான் அதிக தடுப்பூசி போடப்படுகிறது. அமெரிக்காவை விட 4.8 மடங்கும், பிரிட்டனை விட 12.5 மடங்கும் அதிக தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது என்றார்.

தொடர்ந்து பேசிய பலராம் பார்கவா, “தேவையில்லாத பயணம், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நேரமிது. பண்டிகைகளை கரோனா நெறிமுறையை பின்பற்றி கொண்டாடுவது அவசியம் என்றார்”.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே