கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைந்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நேஷனல் ரேவியூ என்ற பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

அப்படி சீனா என்னதான் மறைத்தது. விரிவாக பார்க்கலாம்.

டிசம்பர் 19ஆம் தேதி சீனாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி தான் ஹுவானன் கடல் உணவு சந்தைக்கு சென்று வந்த ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அதன் பிறகு ஐந்து நாட்களிலேயே சந்தைக்கு தொடர்பே இல்லாத அவரது மனைவிக்கும் காய்ச்சல் ஏற்பட்டு தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பலரும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களெல்லாம் கடல் உணவு சந்தையோடு தொடர்புடையவர்கள் என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 25ஆம் தேதி மருத்துவர் லீ வென்லியாங் என்பவர் சார்ஸ் போன்ற ஒரு சுவாசக் கோளாறு ஏற்படுத்தும் நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக தனது சக மருத்துவர்களை எச்சரித்து, தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்.

ஆனால் அவர் வதந்தி பரப்புவதாக குற்றம் சாட்டிய உள்ளூர் அதிகாரிகள், டிசம்பர் 31ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நோய் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறினர்.

எச்சரிக்கை மணி எழுப்பிய மருத்துவரிடம் ஜனவரி 3 ஆம் தேதி மன்னிப்பு கடிதம் வாங்கியதுடன், முன்பின் தெரியாத நோய் குறித்து எந்தத் தகவலையும் வெளியிட வேண்டாமென தனக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் உத்தரவிட்டது.

அதேநாளில் வுகானில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளைச் சோதிப்பதை நிறுத்தும்படி ஹூபே சுகாதார ஆணையம் உத்தரவிட்டதுடன், அனைத்து மாதிரிகளையும் அழிக்கவும் ஆணையிட்டது.

மனிதனிடம் இருந்து மனிதருக்குப் பரவுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கூறி வந்த சீனா ஜனவரி 8ஆம் தேதி பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தது.

ஜனவரி 11ஆம் தேதி சீன சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடலுணவு சந்தையோடு தொடர்புடையவர்கள் என அறிவித்தது.

அதே நேரத்தில் வைரஸ் மனிதனிடம் இருந்து மனிதருக்குப் பரவுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என மீண்டும் கூறியது.

ஜனவரி 13ஆம் தேதி தான் சீனாவுக்கு வெளியே முதல் கொரோனா பாதிப்பு தாய்லாந்தில் கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட சீனப்பெண் வுகானில் கடல் உணவு சந்தைக்கு செல்லவில்லை என தாய்லாந்து மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜனவரி 14ஆம் தேதி ஜப்பானில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் சீனா ஜனவரி 15ஆம் தேதி கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவாது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என அறிவித்தது.

இப்படி மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகிறது என தெரிந்த பின்னரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக சுமார் 40 ஆயிரம் பேரை ஒரே இடத்தில் கூட சீனா அனுமதித்ததாக அமெரிக்காவின் நேஷனல் ரேவியூ பத்திரிக்கை கூறுகிறது.

ஜனவரி 20ஆம் தேதி குவாங்க்டான் மாகாணத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர்தான் மனிதரிடமிருந்து மனிதருக்கு இந்த நோய் பரவுகிறது என்பதை சீனா முதல் முறையாக முழுமையாக அறிவித்தது.

ஜனவரி 21ம் தேதி அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர் சீனாவில் இருந்து ஆறு நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்கா திரும்பியிருந்தார்.

இதுவரை சீனா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் குழு ஒன்று ஜனவரி 22ஆம் தேதி வுகான் சென்று நோய் மனிதனிடமிருந்து மனிதருக்கு பரவுகிறது என்பதை உறுதி செய்தது.

இதன் பின்னரே வுகான் நகரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டது.

ஆனால் அதற்குள்ளாக வுகான் நகரில் பாதிக்கப்பட்டு எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்த ஆயிரக்கணக்கானோர் உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு விட்டனர்.

நோய் உலகமெங்கும் பரவி விட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே