#BREAKING : 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு இல்லை..!!

தற்போதைய சூழலில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், கடந்த மாதம் 19ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் பள்ளிக்கு வர அரசு அனுமதி அளித்ததன் பேரில், கடந்த 8ம் தேதியில் இருந்து 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்திருப்பதால் பிற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. 

தேர்தலுக்கு முன்பாக முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இன்றைய சூழ்நிலையில் 6,7,8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும்; தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே