எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல் நிலை சரியாகி எஸ்.பி.பி நிச்சயம் மீண்டு வருவார் என அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.பி.யின் உடல்நிலை நேற்று எப்படி இருந்ததோ இன்றும் அப்படியே உள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது என்றும், இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
ஆனால் கடந்த 13ம் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.