மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்பு!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமைக் கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவரின் செயலாளராக இருந்த சஞ்சய் கோத்தாரியை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமைக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு பரிந்துரைத்தது.

இதையடுத்து அதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைக் கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் போதிய இடைவெளி விட்டு அமர்ந்திருந்தது குறிப்பிடத் தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே