சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மண்டல வாரியாக 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை ஆளுநரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை கிழக்கு மண்டலத்துக்கு ஆபாஷ்குமார், வடக்கு மண்டலத்துக்கு மகேஷ் குமார் அகர்வால், தெற்கு மண்டலத்துக்கு அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டலத்துக்கு அபய் குமார் சிங், புறநகர்ப் பகுதிகளுக்கு பவானீஸ்வரி ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்று ராதகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே