செல்வமுருகன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய கோரிக்கை..; பரிசீலிக்க மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு..!!

உயிரிழந்த விசாரணைக் கைதி செல்வமுருகனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நெய்வேலியை சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டு விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், ஒரு சில நாட்களிலேயே செல்வமுருகன் உயிரிழந்தார். செல்வமுருகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டிய உறவினர்கள், காவலர்கள் தான் அவரை அடித்துக் கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.

இருப்பினும் செல்வமுருகனின் உடலை பெற்றுக் கொள்ளாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே செல்வமுருகனின் மனைவி பிரேமா, அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, செல்வமுருகனின் மனைவி பிரேமாவின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என விருத்தாச்சலம் மாஜிஸ்திரேட்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே