மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி அணி..!!

சென்னையில் நடந்து வரும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி வாங்கியது.

2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் நடந்து வருகிறது.

இதில் 8 அணிகளும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்து 292 வீரர்களே ஏலத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளன.

இதில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 61 இடங்களுக்கு 292 வீரர்கள் ஏலத்தில் போட்டியிடுகின்றனர்.

ஐபிஎல் ஏலம் தொடங்கியபின் ஆல்ரவுண்டர்கள் வீரர்கள் அறிவிக்கப்பட்டன. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்வெலுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி வைத்து அறிவிக்கப்பட்டார்.

மேக்ஸ்வெல் அறிவிக்கப்பட்டதும் ரூ.3 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் கேட்டது. ஆனால், அதற்குள் ஆர்சிபி அணி நுழைந்து, மேக்ஸ்வெலுக்கு ரூ.4 கோடி விலை வைத்தது.

ஆனால், கேகேஆர்அணி விடாமல் ரூ.4.40 கோடிக்கு மேக்வெல்லை விலைக்கு கேட்டது.

இதைப்பார்த்த சிஎஸ்கே அணி நிர்வாகம் மேக்ஸ்வெலுக்கு ரூ.5.50 கோடிக்கு விலைக்கு கேட்டு, பின்னர் ரூ.6 கோடியாக உயர்த்தியது. ஆனால், ஆர்சிபி அணி விடவில்லை.

இதனால் சிஎஸ்கே அணி மேக்ஸ்வெலுக்கு ரூ.6.50 கோடி விலை வைத்தது.

ஆனால் ஆர்சிபி அணி விடாமல் துரத்தியதால் இறுதியாக மேக்ஸ்வெலுக்கு ரூ.10 கோடியாக சிஎஸ்கே அணி நிர்ணயித்தது.

ஆர்சிபி அணி மேலும் ஒரு படி சென்று ரூ.11.25 கோடியாக மேக்ஸ்வெலுக்கு விலை வைத்தது.

சிஎஸ்கே அணி நிர்வாகம் விட்டுக்கொடுக்காமல் மேக்ஸ்வெலுக்கு ரூ.12.75 கோடியாக நிர்ணயித்தது. ஆனால், அதிரடியாகஆர்சிபி அணி ரூ.13.50 கோடிக்கு மேக்ஸ்வெலை விலைக்குகேட்டது.

சிஎஸ்கே அணி நிர்வாகம் மேக்ஸ்வெலை விலைக்கு வாங்க வேண்டும் நோக்கில் ரூ.14 கோடிக்கு வாங்குவதாக அறிவித்தது.

ஆனால், ஆர்சிபி அணி ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெலை வாங்குவதாக அறிவித்தது. மேக்ஸ்வெல் ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி அணிக்கு விற்கப்பட்டார்.

வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் அடிப்படைவிலையாக ரூ.2 கோடிக்கு அறிவிக்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.3.20 கோடிக்கு சகிப் அல் ஹசனை விலைக்கு வாங்கியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே