விழுப்புரம் அருகே ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முடிவால் ஏமாற்றமடைந்த ரஜினி ரசிகர் அதிர்ச்சியில் உயிரிழந்தார். சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்துவிட்டு பின்பு அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.

இவர் சிறு வயது முதலே தீவிர ரஜினி ரசிகர் ஆவார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதற்கு களப்பணியாற்றி வந்தார்.

மேலும் அவரது அரசியல் வருகையை பெரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தார்.

ஆனால், உடல்நிலை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து மனஉளைச்சல் அடைந்தார். 

மேலும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் முடிவைக் கேட்டு தனது இறுதி கருத்து என ராஜ்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விட்டு அதிர்ச்சியில் இறந்து விட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

உயிரிழந்த ராஜ்குமாருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே