சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4 ஆம் தேதி தொடங்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி, ஜூன் 14 வரை ஒவ்வொரு தேர்வுக்கும் போதுமான நாள்கள் இடைவெளியுடன் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 15-ல் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது இதுவரை திறக்கப்படவில்லை.

சில மாநிலங்களில் மட்டும் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிலும், ஆன்லைன் வகுப்புகள்தான் பெரும்பாலும் நடத்தப்பட்டு வருகின்றது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில்,கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்தத் தேர்வுகள் இணையவழித் தேர்வுகளாக அல்லாமல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதும் முறையில்தான் இருக்கும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்திருந்தார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களைப் பரிசீலனை செய்து, அதன்படி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 2021 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், அந்த தேர்வுகள் மே 4 தொடங்கி ஜீன் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே