ரஜினி மக்கள் மன்ற மாவட்டச்செயலாளர்கள் 4 பேர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். 

நடிகர் ரஜினிகாந்த் ஏற்பட்ட இரத்தம் அழுத்தம் காரணமாக அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார்.

இதைத்தொடர்ந்து, ரஜினி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.

அதில், தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார். இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தங்களது கட்சிக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இதன் விளைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.

நான் என் முடிவை கூறிவிட்டேன்.

தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் திமுகவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.

குறிப்பாக ரஜினிக்கு நெருக்கமான தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் திமுகவில் இணைந்துள்ளார்.

ஸ்டாலின் என்பவர் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் சென்னை முகவரியில் கட்சி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே