மார்ச் 28ல் ராகுல்காந்தி – மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம்..!!

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் மார்ச் 28-ந் தேதி ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது.

மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது.

ஒவ்வொரு கட்சி தலைவர்களும் சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

இருப்பினும் கடந்த காலங்களைப் போல ஒவ்வொரு கூட்டணியின் அத்தனை தலைவர்களும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யும் நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படாமல் இருந்தது. 

இதனை நாம் நமது ஒன் இந்தியா தளத்தில் நேற்று பதிவும் செய்திருந்தோம்.

இந்த நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் மே 28-ந் தேதி பிரசாரம் செய்கின்றனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் இந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கின்றனர்.

மேலும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான இரா. முத்தரசன், கே.எம். காதர் மொகிதீன், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன், ஈ.ஆர். ஈஸ்வரன், பி.வி. கதிரவன், இரா. அதியமான், இனிகோ இருதயராஜ், முருகவேல்ராஜன் ஆகியோரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அதிமுக கூட்டணியிலும் இதேபோல் பிரமாண்ட பொதுக்கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே