தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தால் அதையும் கலைக்க முயற்சிக்கும் எச்சரிக்கை சிக்னலே புதுச்சேரி கலைப்பு- திருமாவளவன் ஆவேசம்

மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி அண்ணா சிலை அருகே, காங்., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமை காங்கிரஸ் அரசை திட்டமிட்டு பாஜக கலைத்ததாகவும் அதற்கு என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக துணைபோயிருப்பதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் திருமாவளவன் பேசும்போது, ‘தமிழகத்தில் பா.ஜ., ஜம்பம் பலிக்காது; ஓட ஓட விரட்டி அடிப்போம் என்றார்.

அவர் மேலும் பேசும்போது, “பா.ஜ., இப்போது, பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு என்ற ஜனநாயக படுகொலையை செய்து வருகிறது. புதுச்சேரியிலும் இப்படித்தான் செய்துள்ளது. புதுச்சேரியில் ஒரு இடத்தில்கூட பா.ஜ., வெற்றி பெற முடியாது.பா.ஜ.,வின் அநாகரிக அரசியலுக்கு, அ.தி.மு.க,, – என்.ஆர்.காங்., கட்சிகள் துணை போய், புதுச்சேரி மக்களுக்கு துரோகம் செய்துள்ளன. ஐந்தாண்டு காலம் ரங்கசாமி எங்கே போனார் என தெரியவில்லை.

இவர்களை, புதுச்சேரி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைத் தால், அதையும் கலைக்க முயற்சிக்கும் என்பதற்கான எச்சரிக்கை சிக்னலை, புதுச்சேரியில், காங்., ஆட்சியை கலைத்திருப்பதன் மூலம், பா.ஜ., தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ., ஜம்பம் பலிக்காது. தமிழகத்தில், பா.ஜ.,வை ஓட ஓட விரட்டி அடிப்போம்” என்றார் ஆவேசமாக.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே