ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம் – சசிகலா

பொது எதிரி தமிழக ஆட்சிக் கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும்; அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன் என சசிகலா தெரிவித்திருக்கிறார்.

பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா வாணியம்பாடி டோல்கேட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக அங்கிருந்த தொண்டர்களிடையே சசிகலா உரையாற்றினார்.

இந்த பேச்சின் முழு விவரம்:

அனைவருக்கும் வணக்கம். என் உடல் பூரண நலம் பெற வேண்டிய வாழ்த்திய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

தெய்வ அருளாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா ஆசியாலும் நான் இந்த கொரோனாவில் இருந்து மீண்டும் வந்திருக்கிறேன்.

உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடகா அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா சொன்னது போல், எனக்குப் பின்னாலும் இந்த அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும் என்ற அந்த நல்ல எண்ணத்தை தொடர..

என் வாழ்நாள் முழுவதுமே கழகமே குடும்பம், குடும்பமே கழகமாக எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை கழக முன்னேற்ற்த்துக்கு அர்ப்ப்பணிப்பேன்.

ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்றும் எனக்கும் பிள்ளைகள்தான். அதிமுக எத்தனையோ முறை சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவையாக கழகம் மீண்டெழுந்திருக்கிறது. அதேபோல் எம்ஜிஆரின் பொன்மொழிக்கேற்பட்ட ஜெ.வின் வழிவந்த ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாக ஒரு அணியில் நின்று…

நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம், என்னுடைய குறிக்கோள்.

நம்முடைய அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம்கொடுத்துவிடக் கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம்.

அதைக் காப்பது நமது கடமை.

எம்ஜிஆர் கட்டிக் காத்து ஜெயலலிதாவின் வழியில் வெற்றி நடையுடன் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்துவிடக் கூடாது என்று உங்களுக்கு எல்லாம் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அதிமுக என்னும் இந்த மாபெரும் இயக்கம் வளர ஏழை மக்களின் மனதில் என்றும் குடிகொண்டிருக்கும் இந்த இயக்கம் வாழையடி வாழையாகத் தழைத்தோங என் இறுதி மூச்சு உள்ள வரை இந்த இயக்கத்துக்காக என்றும் உழைத்திருப்பேன்.

ஜெ.வின் அன்பு தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தலில் வெற்றிக் கனியை ஜெயலலிதாவின் பொற் பாதங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்க வேண்டும். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை ஜெயலலிதாவின் ஆசி கொண்டு வெற்றி பெற்றுவோம்.

எம்ஜிஆரின் பொன் மொழிகளுக்கு ஏற்ப அன்புக்கு நான் அடிமை; தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை- கொண்ட கொள்கைக்கு நான் அடிமை; தமிழக மக்களுக்கும் என் தொண்டர்களுக்கும் நான் அடிமை.. ஆனால் அடக்குமுறைகளுக்கு அஞ்ச மாட்டேன். இவ்வாறு சசிகலா கூறினார்.

https://drive.google.com/file/d/1L9N76oRQXjHwflfbG4heEiNwvcz4HF9e/view

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே