“அதிரடி சரவெடி”- தோனி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா!

விஜய் ஹசாரே கோப்பை காலிறுதியில் மும்பை அணியில் இடம்பெற்ற பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் அவர் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் இந்நாள் கேப்டன் கோலி ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்காக நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மும்பை – சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது. அடுத்து 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது

மும்பை அணியில் இடம் பெற்ற பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 185 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து மும்பை அணி 41.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பிரித்வி ஷா முக்கியமான சாதனைகளை முறியடித்தார். அது கடந்த 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 183 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனையாக இருந்தது.

அதன்பின் கடந்த 2012 ஆம் ஆண்டில் டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற விராட் கோலி உதவினார். இப்போது பிரித்வி ஷா 185 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து மும்பையை அரையிறுதிக்கு தகுதிப் பெற வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே