நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தொடக்க லீக் ஆட்டத்தில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஷேக் ஜாயித் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

மும்பை தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, டி காக் களமிறங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.4 ஓவரில் 46 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.

ரோகித் 12 ரன் எடுத்து பியுஷ் சாவ்லா சுழலில் சாம் கரன் வசம் பிடிபட்டார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டி காக் 33 ரன் (20 பந்து, 5 பவுண்டரி) விளாசி சாம் கரன் பந்துவீச்சில் வாட்சன் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனால் 5.1 ஓவரில் 48 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்த மும்பை அணி திடீர் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், சூரியகுமார் – சவுரவ் திவாரி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்து நம்பிக்கையளித்தது.

சூரியகுமார் 17 ரன் எடுத்து தீபக் சாஹர் வேகத்தில் சாம் கரன் வசம் பிடிபட்டார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவுரவ் திவாரி 42 ரன் எடுத்து (31 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஜடேஜா சுழலில் டு பிளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதிரடியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிய ஹர்திக் பாண்டியா 14 ரன் எடுத்த நிலையில், ஜடேஜா சுழலில் டு பிளெஸ்ஸி வசம் பிடிபட, மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஜடேஜா வீசிய 15வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்ந்தது மும்பை ரன் குவிப்புக்கு சடன் பிரேக் போட்டது.

அடுத்து வந்த குருணல் பாண்டியா 3 ரன், போலார்டு 18 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), பேட்டின்சன் 11 ரன் எடுத்து லுங்கி என்ஜிடி வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர்.

தீபக் சாஹர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டிரென்ட் போல்ட் ஸ்டம்புகள் சிதற டக் அவுட்டாகி நடையை கட்டினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது.

ராகுல் சாஹர் 2 ரன், பூம்ரா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

முரளி விஜய், ஷேன் வாட்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

வாட்சன் 4 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபுள்யு ஆனார்.

முரளி விஜய் 1 ரன் எடுத்து பேட்டின்சன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, சென்னை அணி 2 ஓவரில் 6 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.

இந்த நிலையில், டு பிளெஸ்ஸி – அம்பாதி ராயுடு ஜோடி களமிறங்கியது.

இந்த ஜோடி பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசியது.

இந்த நிலையில் அணியின் ஸ்கோர் 121 ஆக இருந்தபோது  சாஹர் பந்தில் அம்பாதி ராயுடு அவுட் ஆனார்.

அப்போது அம்பாதி ராயுடு 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 48 பந்தை சந்தித்து 71 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து பிளஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா 5 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகள் உள்பட 10 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யு முறையில் ஹர்திக் பந்தில் அவுட் ஆனார்.

அப்போது அணியின் ஸ்கோர் 134 ஆக இருந்தது. 

தொடர்ந்து சாம் கருண் ஜோடி சேர்ந்தார்.

அவர் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 18 ரன் எடுத்திருந்தபோது பும்ரா பந்தில் பாட்டின்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தொடர்ந்து கேப்டன் டோனி களம் இறங்கினார்.

அவர் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

44 பந்துகளை சந்தித்த பிளஸ்ஸி 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

அம்பதி ராயுடுவுக்கு மேன் ஆப் தி மேட்ச் வழங்கப்பட்டது.   

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே