மாநில முதல்வர்களுடன் முகக்கவசம் அணிந்து பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி முகத்தில் துணியை முகக்கவசம் போல மூடியவாறு இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் மாநில முதல்வர்களும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அந்த நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு விதித்த 21 நாள் ஊரடங்கு வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்தச் சூழலில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தக் கூட்டத்தில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கை நீட்டிப்பது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

தற்போதைய சூழலில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. எனினும், தற்போது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதி மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற எதிா்க்கட்சிகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, பெரும்பாலான கட்சிகளும் மாநிலங்களும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இதனிடையே, ஊரடங்கை வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஒடிஸா அரசும், மே மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பஞ்சாப் அரசும் அறிவித்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று விவகாரம் தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஏற்கெனவே 2 முறை காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே