ஜோதிகா நடிப்பில் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வெளியான ஒரு சில நிமிடங்களில் தமிழ் ராக்கர்ஸ் தன்னுடைய இணையதளத்தில் HD தரத்தில் இந்த படத்தை வெளியிட்டது திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி எனப்படும் குறிப்பிட்ட மொபைல் அப்ளிகேஷன்களில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையும் மீறி பொன்மகள் வந்தாள் திரைப்படம் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.
ஆனால் திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில், மொபைல் அப்ளிகேஷனில் வெளியான அதே தரத்தில் வெளிவந்தது.
வழக்கமாக திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது திரையில் இருந்து மொபைலில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் இதனால் திரைப்படத்தை துல்லியமாக பார்க்கும் வசதி ரசிகர்களுக்கு கிடைக்காது.
ஆனால் இணையதளத்தில் திரைப்படங்கள் வெளியிடப்படும் பொழுது அனுமதிபெற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அப்ளிகேஷனில் என்ன தரத்தில் வெளியிடப்படுகிறதோ, அதே தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியிடப்படுவது ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், திரைப்படத்தை திரையரங்குகளில் இருந்து மொபைலில் பதிவு செய்தாலும், அதனை எந்த திரையரங்கில் பதிவு செய்தது என கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப வசதி இருந்து வரும் சூழலில், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லாதது திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.