பொள்ளாச்சி பாலியல் வழக்கு – சிபிஐ விசாரணை விவரத்தை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பதில் அளிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி சரவணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை ரகசிய விசாரணையாக இருப்பதால் இறுதி  அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்குவது அதை பகிரங்கப்படுத்துவதாக  ஆகிவிடும் என தெரிவித்தார்.

அதேசமயம் இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடுவதற்கோ அல்லது கண்காணிப்பதற்கோ தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார். 

விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே