கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் – பிரதமர் மோடி

கையெடுத்து கும்பிடுகிறேன், தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இதையொட்டி பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்தினார்.

இதைச் செயல்படுத்திய பின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:

மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஒருவர் மூலமாக மற்றொருவருக்கு எளதில் வைரஸ் பரவும். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள்உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை ஒருபோதும் சகிக்க முடியாது.

மக்கள் தங்கள் சூழலை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இதன் மூலம் முழு அளவில் கரோனாவுக்கு எதிராக நாம் போராட முடியும்.

அடுத்த 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கையெடுத்து கும்பிடுகிறேன், தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே