தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி!

தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்துள்ளது.

குடமுழுக்கை தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிடக் கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் இந்து அறநிலையத்துறையின் பிரமாணப் பத்திரத்தில் கருவறை மற்றும் குடமுழுக்கு நடைபெறும் அனைத்து இடங்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கோவில் சம்பிரதாயங்களில் அரசியலமைப்பு விதிகள் மீறப்படும் நிலையிலேயே நீதிமன்றம் தலையிட இயலும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சமஸ்கிருதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற நீதிபதிகள், தமிழுக்கு முக்கிய இடம் வழங்கப்படுவதாகக் கூறினர்.

குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்தும் கொடுத்து கடந்த காலங்களைப் போலவே நடத்தப்பட இருப்பதால் நீதிமன்றம் இதில் தலையிட இயலாது என்ற நீதிபதிகள், வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்து அறநிலையத்துறை அறிக்கை அடிப்படையில் குடமுழுக்கை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை குடமுழுக்கு நடந்து முடிந்த 4 வாரங்களில் தாக்கல் செய்யவும் இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே