மேட்டூர் – சரபங்கா உபரிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து மழைக்காலத்தின் போது வெளியேறும் வெள்ள உபரி நீரை, சரபங்கா நிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் செய்து திருப்பி விடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் அதற்கான ஆய்வு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நீர்வளத்துறை சார்பில் உபரிநீரை கொண்டு செல்லும் இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் இன்று நடைபெற்றது.

ரூ.565 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின்படி சரபங்கா வடிநில பகுதியில் வறட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியற்றுக்கு மேட்டூர் அணையின் உபரி நீர் மின் மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

வறட்சிக்கு உள்ளான நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள நிலங்களும் பாசன வசதிபெறும்.

மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டம் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இதனை நிறைவேற்றுவதன் மூலம் அந்த பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே