வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ 2 குழுக்களை அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இந்த குழுக்கள் உதவும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் இக்குழுக்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் நெருக்கடி கால மேலாண்மை குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்களில் பிரசவிக்க உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு அவர்களின் உடல்நிலை கவனத்தில் கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

102 மற்றும் 104 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை கர்ப்பிணிகள் பெறலாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மீன் அங்காடி, இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே