மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு நிர்ணயித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு நிர்ணயித்து அண்மையில் அரசு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து கடந்த 1ம் தேதி தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில்,
” ஜெ.,யின் சட்டப்பூர்வ வாரிசாக அவரது சகோதரரின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஜெ., சொத்துக்களை நிர்வகிக்கவும், அவர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ., இல்லத்தை, நினைவிடமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தது.
அதைத்தொடர்ந்து, இல்லம் அமைந்துள்ள, 24 ஆயிரம் சதுரடி நிலம், கட்டடம், மரங்கள் ஆகியவற்றுக்கு, 68 கோடி ரூபாய் நிர்ணயித்து சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது. இல்லத்தில் இருந்து அசையா சொத்துக்களை எடுக்க தடை விதிக்கவும், அரசு செலுத்திய தொகையில், வரி பாக்கியாக 36 கோடி ரூபாய் பெற வருமான வரித்துறைக்கு தடை விதிக்கவும்” தீபா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், வழக்கு விசாரணையை வரும் ஆக.7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.