BREAKING : ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் ‘தலைவி’ படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதே போல் கெளதம் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தலைவி படத்திற்கும், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பின்பற்றி உருவாகும் தொடருக்கும் தடை விதிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் தனது வாழ்க்கையை சேர்க்காமல் தலைவி திரைப்படத்தையும், இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் மனுவில் ஜெ.தீபா கூறியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறியுள்ள ஜெ.தீபா, தனது அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாகவோ, தொடராகவோ எடுக்க  அனுமதிக்க கூடாது என மனுவில் கோரிக்கைவிடுத்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே