ஓஹோ.. இதனால தான் JioPhone 3 அறிமுகம் ஆகலயா? அம்பானி நீ கலக்கு சித்தப்பு!

நடந்து முடிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 2020 ஆம் ஆண்டிற்கான ஏஜிஎம் நிகழ்வில் (நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்) ஜியோ போன் 3 அறிமுகமாகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஏனெனில் கடந்த காலங்களில் நடந்த ஏஜிஎம் நிகழ்வுகளில் தான் ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 அறிமுகமானது. அது இந்த ஆண்டும் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது பொய்யாகி விட்டது.
இருப்பினும் ஏன் ஜியோ போன் 3 அறிமுகம் ஆகவில்லை என்கிற காரணமும், அதற்கு பின்னால் இருக்கும் முகேஷ் அம்பானியின் மாஸ்டர் மூளையும் தற்போது தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதையும் கற்பனைக்கு எட்டாத அளவிலான முதலீடுகள் நடந்துள்ளன என்பதும் நாம் அறிவோம். நாம் அறியாத வடிய என்னவென்றால் ஜியோவும், கூகுளும் கூட்டு சேர்ந்து இந்தியாவில் புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது என்பதுவே!

இந்த தகவல் வெளியான பின்பே ஏன் ஜியோ போன் 3 அறிமுகம் ஆகவில்லை என்கிற குழப்பம் மற்றும் சந்தேகம் தீர்ந்தது. வரவிருக்கும் இந்த “”ஜியோ-கூகுள்” ஸ்மார்ட்போன் ஆனது உகந்த ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டாண்மை மூலம், கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை ஆண்ட்ராய்டு இயக்க முறைமை மற்றும் பிளே ஸ்டோருக்கு மேம்படுத்தப்பட்ட நுழைவு நிலை, அதாவது பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போனை உருவாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

“ஆண்ட்ராய்டு உடனான எங்கள் நோக்கம், எப்போதுமே அனைவருக்கும் கம்ப்யூட்டிங் சக்தியைக் கொண்டுவருவதாகும், மேலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியர்கள் ஆண்ட்ராய்டைத் தழுவிய விதத்தில் நாங்கள் தாழ்மையுடன் இருக்கிறோம். உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவுடனான எங்கள் உறுதிப்பாட்டை கணிசமாக அதிகரிக்க இது சரியான நேரம் என்று நாங்கள் கருதுகிறோம், மேலும் ஜியோவுடனான இந்த கூட்டு முதல் படியாகும்” என்று கூகுள் கூறியுள்ளது.

ஆராய்ச்சியின் படி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இந்தியாவில் 24 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட்போன் இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது.
இந்தியர்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு இடையிலான இந்த இடைவெளியைக் குறைக்க விரும்புவதாக கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இந்த நோக்கத்தின் கீழ், 350 மில்லியன் பீச்சர் போன்களை மலிவு விலையிலான ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் குறிக்கோள் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்களுக்கு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு நிலை ஸ்மார்ட்போன்களுக்கான பிளே ஸ்டோர் ஆப்ஸ் மற்றும் சேவைகளை வழங்க ஜியோ இயங்குதளங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நாங்கள் உதவுவோம் என்றும் கூகுள் கூறியுள்ளது.

“இந்த கூட்டாண்மை மூலம், நாம் ஒருவருக்கொருவர் பலத்தை ஈர்க்க முடியும். அதிகமான இந்தியர்களுக்கு ஸ்மார்ட்போன் அணுகலைக் கொண்டுவர முடியும். மேலும் இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய பல வழிகளை ஆராய்வோம்” என்றும் கூகுள் கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே