ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் – சென்னை உயர்நீதிமன்றம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவிடமாக மாற்றலாம், மற்றப் பகுதிகளை தமிழக முதல்வரின் அலுவலகமாக மாற்ற உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கிலும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோா் தாக்கல் செய்திருந்த வழக்கிலும் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் நிர்வகிக்கலாம்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மற்றும் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை விட தமிழக முதல்வர் அலுவலகம் மற்றும் முதல்வர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றிக் கொள்ளலாம்.

மக்கள் வரிப் பணத்தில் தனியார் சொத்துக்களை வாங்க திட்டமிட்டால், அது முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும்.

எனவே, வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம், மற்ற பகுதியை முதல்வரின் அலுவலகம் மற்றும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என்று நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபாவை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற பரிந்துரைகள் குறித்து 8 வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில், சென்னை அதிமுக நிா்வாகியான புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோா் தாக்கல் செய்திருந்த மனுவில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகளை நிா்வகிக்க, தனியாக ஒரு நிா்வாகியை உயா்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கில், எதிா்மனுதாரா்களாக சோக்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனா்.

மேலும், ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் சாா்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி, செல்வ வரி பாக்கித் தொகைக்காக அவரது போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் கொண்ட அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே