புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 24 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 1,351 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 17 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 91 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 89 பேரும் என 180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், காரைக்கால் பி.கே.சாலை பகுதியைச் சேர்ந்த 57 வயதுப் பெண் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகளித்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.

இன்று புதிதாக 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 215 (97.87 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 998 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 867 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை 41 நாட்களில் 13 ஆயிரத்து 857 சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கும், 29 நாட்களில் 5 ஆயிரத்து 371 முன்களப் பணியாளர்களுக்கும், 13 நாட்களில் 10 ஆயிரத்து 931 பொதுமக்களுக்கும் என 30 ஆயிரத்து 159 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே