சென்னை, கோவையில் ‘அண்ணாத்த’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பு!

குறுகிய ஷெட்யூலில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சிறுத்தை சிவாவுடன் ரஜினி இணைந்திருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. கொரோனா லாக் டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த டிசம்பரில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது.

ஆனால் அப்போது ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ‘அண்ணாத்த’ தயாரிப்பாளர்கள் தங்கள் திட்டங்களை மாற்றி, படப்பிடிப்பை சென்னையில் தொடர்ந்துள்ளனர்.

அதோடு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் மற்றும் பிற நட்சத்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் அடுத்த சில நாட்களில் படமாக்கப்படுகிறது. இது முடிந்ததும் குறுகிய ஷெட்யூலில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம்.

‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு டி இம்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே