தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை – கருணாஸ் அறிவிப்பு..!!

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைவர் கருணாஸ் அறிவிப்பு.

அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அதிமுகவில் சில அமைச்சர்கள் உட்பட தன்னுடைய சமுதாய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என கருணாஸ் பகிரங்கமாக குற்றசாட்டியிருந்தார்.

இதன் காரணமாகவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியிருவதாக அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியை சந்தித்து கடிதம் கொடுத்தனர். 

பின்னர் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்பட்டது.

இதன்பின்னர், வரும் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுகவிற்கு ஆதரவு தருவதாக கொடுத்த கடிதத்தை திரும்ப பெறுவதாக கருணாஸ் அறிவித்திருந்தார்.

திமுகவில் தொகுதி ஒதுக்கீடு செய்வதாக கூறி, கடைசியில் தொகுதி ஒதுக்க வில்லை என்பதால் ஆதரவுவை வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகல், திமுகவிற்கு கொடுத்த ஆதரவு வாபஸ் என தொடர் சிக்கல் நீடித்த நிலையில், டிடிவியின் அமமுகவுடன் கைகோருக்குமா? அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடக்கவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த, அதிமுகவை நிராகரித்து தோற்கடிக்க சபதமேற்று உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை, அதிமுக எதிர்ப்பு உள்ளிட்டவைகளை குறித்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே