காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்திருப்பது ஏமாற்று நாடகம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து உரையாற்றிய மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பு மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.
இருந்த போதும் இந்த அறிவிப்பை மத்திய அரசு தானே வெளியிட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பல ஆண்டுகளாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளதா என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியபோதும் மத்திய அரசிடம் பதில் இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.