புலியை சுட்டுக் கொல்லும் எண்ணம் இல்லை – வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்

T23 என்ற புலியை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது வரை நடக்கிறது என தலைமை வன உயிரின பாதுகாவலர் தகவல்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் பகுதியில் அச்சுறுத்தி வரும் 13 வயதான புலி 4 பேரை கொன்றுள்ளது. ஏராளமான கால்நடைகளும் புலிக்கு இரையாகி உள்ளன. தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலை அளித்து வரும் புலியால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மசினகுடியில் உள்ள புலிக்கு T 23 என அடையாளம் வைக்கப்பட்டு உள்ளது.

சிப்பிப்பாறை வகையை சேர்ந்த அதவை என்ற மோப்ப நாயும், புலியை தேடி களத்தில் இறங்கி உள்ளது. கடந்த நாட்களாக வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் புலி சிக்காததால் சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி உத்தரவிட்டார். உடனடியாக தமிழக, கேரள வனத்துறையினர், தமிழக அதிரடி படை நக்சல் பிரிவினர் இணைந்து புலியை தேடி களம் இறங்கி உள்ளனர்.

புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதை தொடர்ந்து, பலரும் புலியை கொல்லாமல் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சிலரும், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என சிலரும் அப் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் புலி எக்காரணம் கொண்டும் சுட்டு கொல்லப்படாது என்று தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தகவல் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர், புலி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். T23 என்ற புலியை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது வரை நடக்கிறது என்றும் எக்காரணம் கொண்டு சுட்டு கொல்லப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே