சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் எந்த மோதலும் இல்லை என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது.

இதற்காக சிஎஸ்கே உட்பட 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகல்!!

இதற்கிடையில் சென்னை அணிக்கு ஒரு பின்னடைவாக அந்த அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியில் இருந்து திடீரென விலகி நாடு திரும்பினார்.

தனிப்பட்ட காரணத்தினால் சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து ஒதுங்கியதாகவும், இந்த சீசனில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 20-ந் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்து விட்டார்.

அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த துயர சம்பவத்தால் சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஒதுங்கியதாக முதலில் செய்திகள் வெளியாகின.

தோனியுடன் மோதலா ?

ஆனால் ஓட்டலில் கேப்டன் டோனிக்கு ஒதுக்கப்பட்டது போல் தனக்கு பால்கனி வசதியுடன் கூடிய தங்கும் அறை கொடுக்கப்படவில்லை என்று அதிருப்தி அடைந்து அணி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், கொரோனா பாதிப்பு அச்சம் மற்றும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில் உள்ள நெருக்கடி ஒத்துவராததாலும் சுரேஷ் ரெய்னா விலகல் முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.

சுரேஷ் ரெய்னா விளக்கம்

இந்த நிலையில் உலா வரும் செய்திகள் குறித்து சுரேஷ் ரெய்னா வாய் திறந்துள்ளார்.

அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு.. ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் எந்த மோதலும் இல்லை.

அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல் உணருகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்.

தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன். விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன்,’ என்றார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே