புதுச்சேரியில் 15 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!

புதுச்சேரியில் இன்று புதிதாக 397 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 250-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 2) கூறும்போது, “புதுச்சேரியில் 1,315 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், புதுச்சேரியில் 345, காரைக்காலில் 6, ஏனாமில் 46, என மொத்தம் 397 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், புதுச்சேரியில் 10 பேர், ஏனாமில் 3 பேர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

எல்லப்பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 75 வயது முதியவர், நைனார் மண்டபம் கேவி நகரை சேர்ந்த 67 வயது முதியவர், முதலியார்பேட்டை ஜகதாம்பாள் நகரை சேர்ந்த 79 வயது முதியவர், கன்னிகோயில் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 49 வயது ஆண், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த 52 வயது ஆண் ஆகிய 5 பேரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தேங்காய்த்திட்டு வசந்தா நகரை சேர்ந்த 76 வயது முதியவர் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், வீராம்பட்டினம் நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், கலைமணிக்குப்பம் புவனகிரி வீதியை சேர்ந்த 67 வயது முதியவர் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியிலும், தட்சணாமூர்த்தி நகர் வ.உ.சி. வீதியை சேர்ந்த 53 வயது ஆண் நபர் லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரியிலும், மூலக்குளம் ரெட்டியார்பாளையம் பெரம்பை மெயின் ரோட்டை சேர்ந்த 58 வயது பெண் ஜிப்மரிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், ஏனாம் காமராஜர் நகரை சேர்ந்த 88 வயது முதியவர், ஏனாம் பீமா நகரை சேர்ந்த 45 வயது பெண், டிக்கி ரெட்டி வீதியை சேர்ந்த 58 வயது ஆண் ஆகிய மூன்று பேரும் ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 253 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 15 ஆயிரத்து 157 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,054 பேர், காரைக்காலில் 95 பேர், ஏனாமில் 141 பேர் என 2,290 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், புதுச்சேரியில் 2,366 பேர், காரைக்காலில் 98 பேர், ஏனாமில் 165 பேர், மாஹேவில் 17 பேர் என மொத்தம் 2,646 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,936 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 273 பேர், காரைக்காலில் 4 பேர், ஏனாமில் 16 பேர் என மொத்தம் 293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,968 (65.76 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 77 ஆயிரத்து 428 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் 60 ஆயிரத்து 902 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே