இனி கிராம மக்களுக்கு எந்த வங்கியும் கடன் தர மறுக்க முடியாது..! – பிரதமர் மோடி

நாட்டில் முதன்முறையாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் படம்பிடிக்கப்பட்ட வரைபடத்துடன் கூடிய அட்டை வடிவ நிலப்பட்டாக்களை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு வழங்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஊரகப்பகுதிகளில் நிலப்பட்டா இல்லாமல் வாழ்வோருக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் ஆளில்லா விமானங்களில் இருந்து படம்பிடிக்கப்பட்ட வரைபடத்துடன் கூடிய நிலப் பட்டா வழங்கும் திட்டத்தை ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதன்படி முதற்கட்டமாகக் கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், அரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரக்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநில வருவாய்த்துறை, புவியியல் ஆய்வுத்துறை ஆகியவற்றின் உதவியுடன் ஆளில்லா விமானங்களின் உதவியுடன் நில அளவீடு, வரைபடம் தயாரிப்பு ஆகிய பணிகள் நடைபெற்றன.

அதன் அடிப்படையில் 6 மாநிலங்களில் 763 ஊர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு அட்டை வடிவிலான பட்டாக்களை ஒப்படைப்பதைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பயனாளிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பட்டாக்களைப் பெற்ற பயனாளிகள் அந்த நிலத்துக்குச் சட்டப்படியான உரிமையாளர் ஆவதுடன், இவற்றை வங்கிகளிடம் அடமானமாக வைத்துக் கடன்பெற முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

2024ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் 6 லட்சத்து 62 ஆயிரம் ஊர்களில் உள்ளவர்களுக்கு பட்டாக்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலப்பட்டாக்களைப் பெற்றதன் மூலம் பயனாளிகளின் சொத்துக்களை எவரும் பறிக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நிலப்பட்டா வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், பயனாளியின் வீடு, வீட்டைச் சுற்றியுள்ள நிலம் ஆகியவற்றை அவருக்கு உரிமையாக்கித் தரப்படுவதால், வரி வருவாய்க்கும் சொத்துரிமை பற்றிய தகராறுகளைத் தீர்க்கவும் உதவும் என்றும் தெரிவித்தார்.

ஒரு நிலத்துக்கு ஒருவர் உரிமையாகும்போது அவரின் தன்மதிப்பு உயர்வதாகவும், அவர் வலிமையுடனும் பாதுகாப்புடனும் இருப்பதை உணர்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகில் மூன்றில் ஒரு பங்கினரிடம்தான் நிலப்பட்டா உள்ளதாகவும், தற்போது இந்தியாவின் ஊர்ப்புறங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலப்பட்டா உள்ளதால் வங்கிகள் அவர்களுக்குக் கடன் வழங்க மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இது தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் மோடி குறிப்பிட்டார்.

தமது அரசு நடைமுறைப்படுத்திய பல்வேறு திட்டங்களின் பலனாக நாட்டில் வீடற்ற 2 கோடி பேருக்கு உறுதியான வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

பல ஆண்டுகளாக கிராமப்புறங்களை சேர்ந்த கோடிக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் தவித்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன், நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த நாட்கள் கொண்டாடப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமான இன்று , இந்த சாதனை குறித்து தாம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் மோடி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே