உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கூடாது – கி. வீரமணி

உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு கூடாது என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்து நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எங்கள் அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது என்று உயர்நீதிமன்றத் தில்  தமிழ்நாடு அரசு அறிவித்திட வேண்டும் என்பதை விளக்கி   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் வந்தது ஏன்? தமிழ்நாட்டில்  1928 முதல் நீதிக்கட்சி ஆட்சியால் நீண்ட காலம் அமுலில் இருந்து வந்த கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமை ஆணையை எதிர்த்து, இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரியில் அமுலுக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தவறான தகவல்களை நீதிமன்றத்திற்குக் கொடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, அது செல்லாது என்று தீர்ப்புப் பெற்ற வர்கள் – பார்ப்பன மேலாண்மையாளர்களாக கல்வி, உத்தியோகத்தில் ஏகபோகத்தை அனு பவித்து வந்தவர்களே!

அன்றைய உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் அந்தத் தீர்ப்பு உறுதிப் படுத்தப்பட்டது. சமூகநீதி பறிக்கப்பட்டதை எதிர்த்து, தந்தை பெரியார்  மக்கள் மன்றத்தைத் திரட்டி நடத்திய மாபெரும் கிளர்ச்சியும், போராட்டமும் மத்திய அரசினை சிந்திக்க வைத்தது.

பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரும் முதலாவது அரசியல் சட்டம் திருத்தம் தொடர்பாக  அன்றைய நாடாளு மன்றத்தில் கொணர்ந்து நன்கு விவாதித்தனர். ஆளும் காங்கிரசே ஆதரவு அளித்தது.

பிரதமர் நேரு தெளிவாக, தென்னாட்டுப் போராட்டத்தை விளக்கி, திருத் தத்தை முன்மொழிந்து, நிறைவேற்றி, டாக்டர் அம்பேத்கரை கலந்து முடிவெடுத்ததின் விளைவே – கல்வி வாய்ப்பில் விடுபட்டிருந்த இட ஒதுக்கீட்டுக்கான பிரிவாக 15(4) என்பது அடிப்படை உரிமைகள் பகுதியில் புகுத்தப்பட்டது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்ற அளவுகோலே சரி!

  1. பிற்படுத்தப்பட்டோரை அடையாளப் படுத்தும் வகையில், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ‘‘Socially and Educationally” என்ற சொற்கள் இணைக்கப்பட்டன. பொருளாதார அடிப்படைபற்றி சிலர் கூறியபோது, அது நிலையான அளவுகோல் அல்ல; அடிக்கடி மாறக் கூடியது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதி யாகவும் என்ற அளவுகோலே இழைக்கப்பட்ட சமூகஅநீதிக்குப் பரிகாரம் – மாற்று என்பதையும் சுட்டிக்காட்டினர். (இவை ஏற்கெனவே பிரிவு 340 இல் கையாளப்பட்டிருக்கும் சொற்றொடர் களே என்பதையும் விளக்கினர்).

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பொருளாதார அளவுகோல் பின்வாங்கப்பட்டது – ஏன்?

  1. பிறகு வந்த பல உச்சநீதிமன்றத் தீர்ப்பு களின் விளக்கத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏழ் மையை ஒழிக்கும் திட்டம் அல்ல; முன்பு காலங்காலமாய் (ஜாதி அடிப்படையில்) வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் உரிமை என்றும் விளக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, 1977 ஆம் ஆண்டில், எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில் முதல மைச்சராக வந்தபோது, பிற்படுத்தப்பட்டோ ருக்குக் கொடுக்கப்பட்டு வந்த இட ஒதுக் கீட்டில், ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்ற ஓர் அளவுகோல் ஆணையைப் பிறப்பித்த போது, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் (சி.பி.அய்),  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (அய்.யூ.எம்.எல்.) கட்சிகளும், காங்கிரஸ் கட்சி- ஜனதா கட்சியில் சில தலைவர்களும் இணைந்து கடுமையாக எதிர்த்ததோடு, நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. (39 இடங் களில் 37 இடங்களில் தோல்வி).

பிறகு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்த ஆணையை – பொருளாதார அளவுகோல் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை எம்.ஜி.ஆர். அரசு ரத்து செய்தது.

  1. மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, மத்திய காங்கிரஸ் அரசு கொணர்ந்த உயர்ஜாதி ஏழை களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணையும் அரசியல் சட்ட விரோதம் – செல்லாது என்று தீர்ப்பளித்து ரத்து செய்தது!

103 ஆவது சட்ட திருத்தம் என்பது என்ன?

  1. ஆனால், இதையெல்லாம்பற்றிக் கவலைப் படாமல், உயர்ஜாதியினரான பார்ப்பனரும், வடநாட்டில் சில மாநிலங்களில் வாக்கு வங்கி பெற்றுள்ள உயர்ஜாதியைச் சேர்ந்த மற்றவர் களும் 10 சதவிகித இட ஒதுக்கீடு தரும் சட் டத்தை, பொதுத் தேர்தல் 2019 இல் வருவதற்கு முன்பு, (2018 இல்) இரண்டொரு நாளில் – நாடா ளுமன்றத்திற்கு அவகாசமே தராமல், 103 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக நிறைவேற்றி, அதற்காக இடங்களைக் கூட்டி, நிதிகளையும் அதிகரித்தனர். (ஆர்.எஸ்.எஸ். கொள் கையான பொருளாதார அடிப்படையை – ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை விட்டதைப் போல நுழைத்துவிட்டனர்). உச்சநீதிமன்றத் திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன!

தமிழ்நாடு, சமூகநீதிக்கு இந்தியாவிற்கே கலங்கரை வெளிச்சமாகி வழிகாட்டும் மாநில மாகையால், இதில் தெளிவான நிலை – 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு பலத்த எதிர்ப்பு – திராவிடர் இயக்கம் முதல் அத்துணை கட்சிகளும் (பா.ஜ.க. தவிர) எதிர்க்கும்.

சென்ற ஆண்டு ஜூலையில் 3,000 இடங் களை மருத்துவக் கல்விக்குக் கூடுதலாக தமிழ்நாட்டுக்குத் தருகிறோம் என்று நாக்கில் தேன் தடவியபோதுகூட,  தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதற்கு ஆதர வான முடிவு எடுக்கவில்லை. காரணம், பெரும் பாலான கட்சிகள் திராவிடர் கழக வழிகாட்டலில் எதிர்க்கவே செய்தன!

10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும்

இன்னமும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இதில் உறுதியாக இருப்பதால், 10 சதவிகிதத்தை ஏற்க இயலாது என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த 10 சதவிகித பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியின் அடிப் படையின் வேரில் வெந்நீர் ஊற்றுவது என்ற  கட்சிகளின் பொதுக் கருத்தை (Consensus) கருத்திணக்கத்தை ஏற்றுக்கொண்டது தமிழக அரசு. உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்களும், மற்ற சிலரும் வழக்குப் போட்டுள்ளனர்.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூத்த அமைச்சர்கள் குழு  இது அரசின் கொள்கை முடிவு   (Policy Decision) என்று திட்டவட்டமாக அறிவிக்கவேண்டும். இது அவசியமும், அவசரமும்கூட!

ஏற்கெனவே காட்டியுள்ள உறுதியிலிருந்து தமிழக அரசு எக்காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது; மக்கள் மன்றம் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளது!

அம்மா ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி என்றால், பொருளாதார அடிப்படையில் ஏற்கமாட்டோம் என்று திட்டவட்டமான கொள்கை முடிவினை எடுத்து, உயர்நீதிமன்றத்தில் அறிவித்து, அதனை (10 சதவிகிதத்தினை) ஏற்காத இன்றைய நிலையிலிருந்து பின்வாங்கவே கூடாது!

இப்போது காட்டும் உறுதியான – 10 சதவிகித இட ஒதுக்கீடு முன்னேறிய ஜாதியினருக்கு என்ற நிலைப்பாட்டை எதிர்ப்பது சமூகநீதியைப் பாதுகாப்பது ஆகும். ‘‘பசியேப்பக்காரனுக்குத் தான் பந்தியில் இடமே தவிர, புளியேப்பக் காரனுக்கு அல்ல” என்பதுதான் நியாயம்!

உயர்ஜாதியில்  பொருளாதாரத்தில் நலிந் தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, கிரிமீலேயரை ஏற்காத மாநிலம் தமிழகம் என்பதையே புரட்டி, தலைகீழாக்கிவிடும் ஆபத்தும் நுழைந்துவிடும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய  வழியிலிருந்து தடம் புரளக்கூடாது!

உறுதியான நிலைப்பாட்டில் இருந்து தமிழ் நாடு அரசு மாறினால், கடுமையான விலையைத் தரவேண்டியிருப்பதோடு, அதன் முன்னோர்கள் காட்டிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியிலிருந்து தடம் புரண்டவர்களாவார்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

எனவே,  தெளிவான, உறுதியான நிலைப் பாட்டை எடுத்து, சமூகநீதி மண்ணின் தனித் தன்மையை காப்பாற்றட்டும்!

இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே