ரசிகர்கள் கோயில் கட்டியதற்கு நிதி அகர்வால் அறிக்கை..!!

சபீர் கான் இயக்கிய முண்ணா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நிதி அகர்வால்.

பின்னர் டோலிவுட்டில் கவனம் செலுத்திய இவர் மிஸ்டர் மஜ்னு, சவ்யாசாச்சி போன்ற படங்களில் நடித்தார்.

இதனையடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நிதி அகர்வால் நடித்த ஐ ஸ்மார்ட் சங்கர் என்னும் படம் வேறு லெவலில் ஹிட் அடித்தது.

ஆந்திரா, தெலங்கானாவில் இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. இதனால் நித்தி அகர்வாலுக்கு பாராட்டுகளும், பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

இந்த படத்தின் வெற்றிதான் அவர் கோலிவுட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை ஏற்படுத்தித் கொடுத்தது.

இதன் மூலம் தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்தார் நிதி அகர்வால். தொடர்ந்து சிம்புடன் ஈஸ்வரன் படத்திலும் நடித்தார்.

தமிழில் நிதி அகர்வால் நடித்த இரண்டு படங்களும் அண்மையில் வெளியான நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நிதி அகர்வாலுக்கு சிலை செய்து பாலாபிஷேகம் செய்தனர்.

இதையறிந்த நடிகை நிதி அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ரசிகர்களின் எதிர்பார்ப்பில்லாத அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.

எனக்கு எப்போதும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனக்காக கட்டப்பட்ட கோயிலின் நிர்வாகத்தினர், அதனை ஏழைகளின் உணவு, இருப்பிடம் மற்றும் கல்விக்காக பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே