கரோனா பேரிடரை மிகக் கச்சிதமாகக் கையாண்டு, அதில் வெற்றி பெற்றுள்ளது நியூ சிலாந்து. இங்கு கடந்த 17 நாள்களாக ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படவில்லை.
கரோனா முன்னெச்சரிக்கையாக நியூ சிலாந்து நாட்டின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு, குடிமக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நியூசிலாந்தின் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.
அதே போல் கடந்த 17 நாட்களில் மட்டும் 40,000 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளதாகவும், புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ஊரடங்கில் அதிக தளர்வுகள் அளித்து பழைய நிலைக்கு திரும்ப அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி விட்டதாக நாங்கள் நம்புகிறோம். இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் இருந்து மீண்டு வருவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.