வரி செலுத்தி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி அதிகாரிகள், பல்வேறு வர்த்தக அமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்குவது, மற்றவர்களை ஊக்குவிப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும். கடந்த பிப்ரவரி 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வரி செலுத்துவோர் சாசனம்” தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.