பல ஆண்டுகளாக கூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு பிரமாண்ட ஆலயம் அமையவுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.
அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
”நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம். நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது.
இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் எழும்பவுள்ளது. நீண்ட போராட்டத்திற்காக தியாம் செய்த ஒவ்வொருவரையும் நான் வணங்குகிறேன்.
ராமர் கோயில் போராட்டத்தில் இருந்த உறுதி எவராலும் மறக்க முடியாது. பல ஆண்டுகளாக கூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது.
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்தியில் ராமருக்கு கோயில் அமையவுள்ளது.
சுதந்திரப் போராட்டம் போல் ராமர் கோவிலுக்காகவும் பலர் உயிர் நீத்துள்ளனர். ராமர் கோவிலுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி.
உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. குமரி முதல் நாடு முழுவது ராமர் நாமம் ஒலிக்கிறது.
ராமர் நமது ஒவ்வொருவரின் இதயத்திலும் வசிக்கிறார். எந்த பணியை நாம் செய்தாலும் நமக்கு உந்து சக்தியாக இருப்பவர் ராமர்.
இந்தியாவின் கலாச்சார அடையாளம். நாட்டின் பல பகுதிகளிலும் வெவ்வெறு பெயர்களில் ராமாயணம் மக்களை ஈர்த்து வருகிறது.
அந்தந்த பகுதிகளில் பல மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டுள்ளது. நமது நாட்டில் மட்டுமல்ல இந்தோனேஷியா உட்பட பல நாடுகளிலும் ராம நாமம் ஒலிக்கிறது.
வெறுப்புணர்வை மறந்து கோடிக்கணக்கானவர்களை இணைக்கும் சக்தி ராமருக்கு உண்டு.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.