பாசனத்திற்காக ஆழியாறு அணை ஜூன் 7 ஆம் தேதி முதல் அக். 31 வரை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு 7.6.2020 முதல் 31.10.2020 வரை 146 நாட்களுக்கு தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினைப் பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து 1,156 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.