இஸ்லாமியர்கள் செல்வதற்கு 150 நாடுகள் உள்ளன; இந்துகளுக்கு ஒரே நாடு தான் – விஜய் ரூபானி

இஸ்லாமியர்கள் செல்வதற்கு உலகில் 150 நாடுகள் இருப்பதாகவும், இந்துக்களுக்கு ஒரே நாடு தான் உள்ளது என்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கருத்து தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் அருகே நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் இதனை வலியுறுத்தினார்.

ஆனால் குடியுரிமை சட்ட விவகாரத்தில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது விருப்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி மதிப்பளிக்கவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், மகாத்மா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் முயற்சிகளை காங்கிரஸ் நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் குஜராத் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

1947 பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு 22 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை அச்சுறுத்தல், தாக்குதல், பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களால், தற்போது 3 சதவீதமாக குறைந்துவிட்டது என்றும் விஜய் ரூபானி குறிப்பிட்டார்.

மேலும் வங்கதேசத்தில் வெறும் 2 சதவீதமாக குறைந்துள்ளது என்றும்; ஆப்கானிஸ்தானில் தற்போது வெறும் 500 பேர் மட்டுமே வசிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமியர்கள் உலகில் உள்ள 150 இஸ்லாமிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

ஆனால் இந்துக்களுக்கு ஒரே நாடாக இந்தியா மட்டுமே உள்ளது என்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பேசினார்.

இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கி என்.ஆர்.சி. மூலம் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டால் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்துவிடுவோம் என அச்சப்படுகிற கட்சிகள்தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கின்றன.

ஒடுக்குமுறைக்குள்ளாகி தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு குஜராத் மாநிலத்தில் இந்திய குடியுரிமை வழங்கும் பணி தொடங்கிவிட்டது என்று விஜய் ரூபானி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே