சசிகலாவுடன் எம்.எல்.ஏ தனியரசு சந்திப்பு

சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை தனியரசு எம்.எல்.ஏ சந்தித்து பேசினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆனார் சசிகலா. தொடர்ந்து தமிழகம் வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனக்கூறிவிட்டு சில நாட்கள் அமைதியாக இருந்தார். இதையடுத்து நேற்று சென்னை திநகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய சசிகலா, “ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார், ராதிகா, நாம் தமிழர் கட்சியின் சீமான், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் சீமான், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சசிகலாவை வீட்டிற்கே சென்று அடுத்தடுத்து சந்தித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் முதல் எம்.எல்.ஏவாக தமிழ்நாடு கொங்கு பேரவை கட்சியின் எம்.எல்.ஏ தனியரசு சசிகலாவை சந்தித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தனியரசு ஆகியோர் சசிகலாவுக்கு ஆதரவாக ஏற்கனவே பேசிவந்தது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே