மஹாராஷ்டிரா அரசியல் திருப்பம் பற்றி மு.க ஸ்டாலின் கருத்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா?? அசிங்கம் என்பதா?? எதனோடு ஒப்பிடுவது? என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் பாஜக இன்று காலை ஆட்சியமைத்தது.

தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் அஜித் பவாரின் முடிவுக்கும் தொடர்பு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார்.

தேசிய அளவில் இந்த அரசியல் மாற்றம் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சிவசேனா தலைமையில் ஆட்சியமையும் என்று சரத்பவார் கூறிய நிலையில், இந்த திடீர் அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவுக்கடிதம் அளித்துள்ளதாக கூறியிருந்தார்.

ஆட்சியமைக்கத்தேவையான பெரும்பான்மை இருப்பதாகவும் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா?? அசிங்கம் என்பதா?? எதனோடு ஒப்பிடுவது?

ஜனநாயகப் படுகொலை என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ – நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ ?? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? – பாஜக சித்து விளையாட்டு என்பதா??

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு; மாறாத தலைகுனிவு என்று பதிவிடப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே