மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்ற தேவேந்திர பட்நாவிஸ், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இன்று நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று காலை உத்தரவிட்டது.
இதையடுத்து துணை முதலமைச்சர் அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதேபோல தங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸும் நேற்று மாலை ராஜினாமா செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, புதிய அரசு பதவியேற்கும் வரை காபந்து முதலமைச்சராக இருக்குமாறு தேவேந்திர பட்நாவிஸை கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் கூட்டம் நடைபெற்றது.
இதில் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ-க்களும் கலந்துகொண்டனர்.
அப்போது மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி என்ற கூட்டணியை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
ஆளுநர் கோஷ்யாரியை மூன்று கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் உத்தவ் தாக்கரேவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
ஆதரவு எம்எல்ஏ-க்களின் பட்டியலை 7 நாட்களுக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் பதவியேற்பு விழா, சிவசேனா ஆண்டுதோறும் தசரா விழாவை நடத்தும் சிவாஜி பூங்கா மைதானத்தில், நாளை மாலை 6.40 மணிக்கு நடைபெற உள்ளது.
உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் மாநில முதல்வர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் உத்தவ் தாக்கரே நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.