இன்று சேலம் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி பரப்புரை..!!

சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் 11 தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொது செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்டமான முறையில் மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே