வெங்காய விலை உயர்வு குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை!

வெங்காய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போன்று வெங்காயமும் இன்று கிடுகிடு விலையை வேகமாக எட்டிப்பிடிக்கும் பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.

வெங்காயம் ஏழை – எளிய – நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகி விட்டதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை மாநிலம் முழுக்க நடத்துவதற்குத்தான் திறனற்றுப் போனது என்றால் வெங்காய விலையை கட்டுப்படுத்தவும் அரசு திராணியற்றுப் போய்விட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் ஆகியவையும் பற்றாக்குறை, விலை ஏற்றங்கள் குறித்த செய்திகள் வருவதாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின்,  உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும், நியாய விலையிலும் கிடைக்க மத்திய – மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே